உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..


          பி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்கிற பெண்மனியின் வீட்டிற்கு சென்றுவருவது வழக்கம், அப்பெண்மனி நபிகளாருக்கு பேன் பார்த்துவிடுவார்கள், அருகில் படுத்து உறங்குவார்கள் என்றெல்லாம் ஹதீஸ் என்கிற பெயரில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ புனையப்பட்ட செய்தி புஹாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் இடம்பெற்றுள்ளது.

பார்க்க : புஹாரி - 2788, 2789, 2800, 2895, 2924, 7001,7002,
முஸ்லிம் - 3873,

அந்நிய பெண்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை பேணக் கற்றுத்தந்த நபிகளாரே, அந்நியப் பெண்ணின் வீட்டில் சென்று உறங்கினார்கள் எனக் கூறுவது அபத்தமான வாதம், மேலும் அந்நிய பெண்களை பார்த்தாலே பார்வைகளை தாழ்த்தும்படி திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது, எனவே இந்த உம்மு ஹராம் குறித்த செய்திகள் குர்ஆனுக்கும் ஸஹீஹான பிற ஹதீஸ்களுக்கும், நபிகளாரின் இயல்பான நல்லொழுக்க மாண்புகளுக்கும் தெளிவாக முரண்படுகிறது, இது ஹதீஸாக இருக்கவே முடியாது என்கிற அடிப்படையில் இதை ஏற்கக் கூடாது என்கிறோம்...

ஆனால் சிலர் இது போன்ற செய்திகளை உண்மைப்படுத்தி நபிகளாரின் இயல்பான நல்லொழுக்கத்தை இழிவுபடுத்த முயல்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் இரண்டு. முதலாவதாக இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அனைவரும் தரமானவர்கள் என்று கூறுகின்றனர். ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் சரியாக இருந்தாலும், அதன் கருத்து குர்ஆனுக்கும் நிரூபிக்கப்பட்ட பிற ஹதீஸ்களுக்கும் முரண்பட்டால் ஏற்கக் கூடாது என்பதே ஹதீஸ்கலையின் அடிப்படையாகும்.

அறிவிப்பாளர் வரிசையில் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரண்படுமானால் அது இட்டுக்கட்டப்பட்டதாகவே கருதப்படும். காரணம் குர்ஆனை விளக்கி கூற வந்தந்தவர்களே நபிகள் நாயகம்.அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் யாவும் குர்ஆனாக இருக்குமே தவிர முரண்படவே செய்யாது.அப்படி முரண்பட்டால் அது ஹதீஸே கிடையாது. இந்த வழிமுறை ஹதீஸ்கலையில் ஏற்கனவே உள்ளது தான்.

( ஹதீஸ்கலை குறித்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையை அறிய )

அடுத்ததாக இந்த செய்திகளை நியாயப்படுத்த உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் பால்குடி சிற்றன்னை என்றும், மஹ்ரமான உறவினர் என்றும் பொய்க் கூறி இதற்கு புகாரிக்கு விரிவுரை நூலான ஃபத்ஹில் பாரியை எழுதிய இப்னு ஹஜரை வேறு துணைக்கு இழுத்துக் கொள்கின்றனர். இப்னு ஹஜரே இவற்றை ஏற்கவில்லை என்பதை மறைத்து அவரின் விரிவுரையிலும் திரிபு வேலைகளை செய்து பரப்பி வருகின்றனர்.இது எந்தளவிற்கு உண்மை என்பதை அந்த இப்னு ஹஜரின் கூற்றைக் கொண்டே பார்ப்போம்...


பால்குடி உறவா ?


நபி (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும்பொழுது அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார் யார் என்கிற விபரம் ஹதீஸ் மற்றும் வரலாற்று நூற்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவர்களில் முதலாமானவர் அன்ஸாரி குலத்தை சேர்ந்த "சுவைபா" ஆவார். இவர் நபிகளாரின் தந்தையின் சகோதரன் அபு லஹபின் அடிமையும் ஆவார்.ஹம்ஜா (ரலி) அவர்களுக்கு பாலூட்டியவரும் இவரே.. (பார்க்க புகாரி 5101)

இரண்டாமானவர் பனூ ஸஅத் கோத்திரத்தை சார்ந்த ஹலீமா பின்த் அபூ துவைப் ஆவார்.. இவரைப் பற்றி நபி (ஸல்) வரலாற்றில் அதிகம் படித்திருப்போம். இவர்கள் இருவரை தவிர நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டியவர்கள் வேறு யாரும் வரலாற்று நூற்களில் இல்லை.. அறிஞர்கள் மத்தியிலும் இந்த விஷயத்தில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை..


உம்மு ஹராம் நபிகளாரின் பால்குடி சிற்றன்னை எனக் கூறுபவர் யார் ?


உம்மு ஹராமோ அல்லது அவரது சகோதரி உம்மு சுலைம் அவர்களோ நபிகளாரின் பால்குடி தாயார் என்பதற்கு எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லை..இந்த இரு நபித்தோழியரின் வாழ்க்கை குறிப்புகளில் கூட அப்படி எதுவும் குறிப்பிடப்படல்லை. உம்மு ஹராமோ, உம்மு சுலைமோ நபிகளாருக்கு குழந்தை பருவத்தில் பாலூட்டி இருந்தால் அவர்களின் வாழ்க்கை குறிப்புகளில் அறிஞர்கள் அதைத்தான் சிறப்பம்சமாக முதலில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

ஆக நபிகளாரின் பால்குடி அன்னையர் தொடர்பான பதிவுகளிலும் இவர்களின் பெயர் இல்லை, உம்மு ஹராம், உம்மு சுலைம் ஆகியோரின் வாழ்க்கை குறிப்பிலும் அத்தகைய தகவல் இல்லை எனும்போது இந்த புரளியை கிளப்பியவர் யாரென்று பார்த்தால், நபிகளார் மரணித்து சில நூற்றாண்டுகளை கடந்து வாழ்ந்த இப்னு அப்தில் பர், இப்னு வஹப் ஆகிய இருவரே இதை கூறுகின்றனர்.. அதுவும் எந்தவித ஸஹாபியின் சாட்சியமும், ஆதாரமுமின்றி யூகமாகவே இதை கூறுகிறார்கள் என்பதை அந்த வாசகங்களை படித்தாலே அறியலாம்.


இப்னு அப்தில் பர் அவர்களின் யூகம் :-

فَقَالَ بن عَبْدِ الْبَرِّ أَظُنُّ أَنَّ أُمَّ حَرَامٍ أَرْضَعَتْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أُخْتَهَا أُمَّ سُلَيْمٍ فَصَارَتْ كُلٌّ مِنْهُمَا أُمَّهُ أَوْ خَالَتَهُ مِنَ الرَّضَاعَةِ فَلِذَلِكَ كَانَ يَنَامُ عِنْدَهَا

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால்புகட்டியிருப்பார்கள். அல்லது அவருடைய சகோதரி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பால் புகட்டியிருப்பார்கள் என்றே நான் யூகிக்கின்றேன். எனவே இவ்விருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடித் தாயாகவோ அல்லது சின்னம்மாவாகவோ இருப்பார்கள். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களிடத்தில் சென்று உறங்கக்கூடியவராக இருந்தார்கள்.

நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)


இப்னு அப்தில் பர் அவர்களின் இந்த வாசகத்தை பார்த்தாலே புரியும் அவர் இந்த ஆதாரமற்ற யூகமாகவே இதை சொல்கிறார் என்று.



இப்னு வஹப்-உடைய ஆதாரமற்ற கருத்தும், அதன் முரண்பாடும் :-



قَالَ لنا بن وَهْبٍ أُمُّ حَرَامٍ إِحْدَى خَالَاتِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الرَّضَاعَةِ فَلِذَلِكَ كَانَ يُقِيلُ عِنْدَهَا وَيَنَامُ فِي حِجْرِهَا وَتَفْلِي رَأْسَهُ 

உம்மு ஹராம் (ரளி) அவர்கள், நபிகளாருக்கு பால்குடிச் சிற்றன்னைகளில் ஒருவர். எனவே தான், நபி (ஸல்) அவர்கள், (பகலில்) உம்மு ஹராம் (ரளி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் மடியில் தூங்குவார்கள்; அவர்களும் நபிகளாருக்கு பேன் பார்த்து விடுவார்கள்.

ஃபத்ஹுல் பாரி பாகம் 11 பக்கம் 78


இவருக்கு இந்த கூற்றை எந்த ஸஹாபி கூறினார், யாரிடமிருந்து இதை அறிந்தார் என எந்தவித ஆதாரத்தையும் இவர் குறிப்பிடவில்லை, நபிகளார் சொன்னதாக அல்லது நபிகளார் பற்றிய ஒரு செய்தியை பதிவு செய்ய வேண்டுமானால் ஒன்று இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழராக இருக்க வேண்டும், அல்லது ஒரு நபித்தோழரின் சாட்சியத்தோடு தான் நபிகளார் குறித்த எந்தவொன்றையும் பதிவுசெய்ய வேண்டும்.. இது எதுவுமே இந்த கருத்தில் இல்லாததால் இதை ஏற்க இயலாது என்பது ஒருபுறமிருக்க, இப்னு வஹபே இவரின் கூற்றில் சந்தேகத்தில் தான் இருக்கிறார் என்பதை கீழ்க்காணும் அவரின் மற்றொரு வாதத்தின் மூலம் அறியலாம்.


ثُمَّ قَالَ وَيَحْتَمِلُ أَنْ يَكُونَ ذَلِكَ قَبْلَ الْحِجَابِ

இந்த சம்பவம் ஹிஜாபுக்கு முன்னால் நடந்திருக்க வாய்ப்புள்ளது (என்று இப்னு வஹப் கூறியுள்ளார்.)

.ஃபத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)


உம்மு ஹராம் (ரலி) நபிகளாரின் பால்குடி சிற்றன்னை என்று முதலில் உறுதியாக கூறியவர், பின்பு இது ஹிஜாபுக்கு முந்தைய சம்பவமாக இருக்கலாம் என்கிற யூகத்திற்கு வருகிறார்.இது ஹிஜாபுக்கு பிறகு நிகழ்ந்த சம்பவம் தான் என்பது வேறு விடயம். எனினும் பால்குடி அன்னை என்கிற கருத்தில் இவர் உறுதியாக இருந்தால் எதற்கு ஹிஜாபுக்கு முந்தைய சம்பவம் என்கிற வாதத்திற்கு வர வேண்டும்.? பால்குடி அன்னைக்குதான் மகன் முன்பு ஹிஜாபே தேவையில்லையே..!!

ஆக இப்னு வஹபே இவரின் கூற்றில் உறுதியானவராக இல்லை, இந்த ஹதீஸில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக இவர்கள் புறத்திலிருந்து வைக்கப்படும் முரண்பட்ட, ஆதாரமற்ற யூகங்களே இவை என்பது தெளிவாகிறது.


இப்னு ஹஜர் அல்அஸ்கலானியின் கூற்று :-

மேற்சொன்ன இப்னு வஹபின் கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் சேர்த்ததாலேயே அவரும் இதை ஏற்பதாக சலஃபுகள் பொய்யாக பரப்பி வருகின்றனர். ஒரு ஆய்வை எடுத்தால் அந்த ஆய்வுத் தொடர்பான அனைத்து கருத்துக்களையும் ஒன்றுதிரட்டி  அவற்றை முன்வைத்தே பரிசீலிக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை ஃபத்ஹ்ல் பாரியில் சேர்த்துள்ளார் என்பதைக் கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தவிர உம்மு ஹராம் நபிகளாரின் பால்குடி தாய் என்பதை இப்னு ஹஜர் ஏற்கவில்லை என்று கீழ்காணும் அவரின் கூற்றிலிருந்து அறியலாம்..

உம்மு ஹராம் தொடர்பாக அனைத்து அறிஞர்களின் கருத்துக்களையும் ஒன்றுதிரட்டி பிறகு இப்னு ஹஜர் கூறுகிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான விஷயம் என்பதே சரியான பதிலாகும்.

ஃபத்ஹுல் பாரீ (பாகம் 9 பக்கம் 203)


அந்நியப் பெண் என உறுதியாகிவிட்ட பிறகு நபிகளார் அங்கே சென்றிருக்க மாட்டார்கள் என்பதே நமது நிலைபாடு.எனினும் தங்களது பொய்க்கூற்றை நம்பவைப்பதற்காக "உம்மு ஹராம் நபிகளாரின் பால்குடி சிற்றன்னை என்று இப்னு ஹஜரே கூறிவிட்டார் என இவரின் மீதும் இட்டுக்கட்டும் இவர்களின் உண்மை நிலையை தோலுறித்துக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம். உம்மு ஹராம் நபிகளாரின் 
பால்குடி தாய் என்பதை அவர் ஏற்கவில்லை. அந்நியப் பெண் என்றே கூறியுள்ளார்.

மேலும் இப்னு ஹஜர் கூறுகிறார் :-

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் செல்லும் போது அங்கே அவர்களுடன் பணியாள், குழந்தை, கணவன் இவர்கள் யாராவது இருந்திருக்கலாம் என்று சிலர் விளக்கம் தருகின்றார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை முழுமையாக நீக்காது. ஏனென்றால் பேன் பார்க்கும் போதும் மடியில் படுக்கும் போதும் ஒருவரையொருவர் உரசும் நிலை இருந்துள்ளது.

ஃ பத்ஹுல் பாரீ, பாகம் 11 பக்கம் : 78


ஆக அந்நியப் பெண்ணை உரசும் நிலையில் நபிகளார் இருக்க மாட்டார்கள் என்பதே இவரின் கூற்றும்.


ரத்தபந்தமும் இல்லை, பால்குடி உறவும் இல்லை :-

நபி (ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மேலாக சேவகம் செய்த அனஸ் (ரலி)யின் சின்னம்மாவே உம்மு ஹராம் (ரலி) ஆவார்கள். அதாவது அனஸ் (ரலி) அவர்களின் தாயாரான உம்மு சுலைம் (ரலி) அவர்களின் தங்கைதான் உம்மு ஹராம்..

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் வம்சாவழியிலான ரத்தபந்த உறவு என இவர்கள் சொல்வது அடிப்படையிலேயே தவறாகும். காரணம் நபி (ஸல்) அவர்கள் குரைஷி குலத்தை சேர்ந்தவர்கள்.. ஆனால் உம்மு ஹராம் அவர்களோ அன்ஸாரி ஆவார். ஆக நபிகளாருக்கும் இவர்களுக்கும் ரத்தபந்தம் என்கிற வாதம் அடிப்படையிலேயே இல்லாமல் போய்விடுகிறது..

இது குறித்து அறிஞர் திம்யாதீ கூறியுள்ள கருத்து அதே இப்னு ஹஜரின் ஃபத்ஹுல் பாரி நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது...



وَبَالَغَ الدِّمْيَاطِيُّ فِي الرَّدِّ عَلَى مَنِ ادَّعَى الْمَحْرَمِيَّةَ فَقَالَ ذَهِلَ كُلُّ مَنْ زَعَمَ أَنَّ أُمَّ حَرَامٍ إِحْدَى خَالَاتِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الرَّضَاعَةِ أَوْ مِنَ النَّسَبِ وَكُلُّ مَنْ أثبت لَهَا خؤلة تَقْتَضِي مَحْرَمِيَّةً لِأَنَّ أُمَّهَاتِهِ مِنَ النَّسَبِ وَاللَّاتِي أَرْضَعْنَهُ مَعْلُومَاتٌ لَيْسَ فِيهِنَّ أَحَدٌ مِنَ الْأَنْصَارِ الْبَتَّةَ سِوَى أُمِّ عَبْدِ الْمُطَّلِبِ

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சாவழியின் மூலமாகவோ, அல்லது பால்குடி உறவின் மூலமாகவோ சின்னம்மா ஆவார் என்று யார் கூறுகிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார். மேலும் மஹ்ரமான உறவு உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் தவறிழைக்கின்றனர். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் வம்சாவழித் தாய்மார்களும் பாலூட்டிய தாய்மார்கள் யார் யார் என்பது அறியப்பட்டிருக்கின்றது. இவர்களில் உம்மு அப்தில் முத்தலிப் என்பவரைத் தவிர அன்சாரிகளில் ஒருவர் கூட கிடையாது.

ஃபத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78) 


இமாம்களின் கருத்தை ஏற்கனும், குறிப்பாக ஃபத்
ஹுல் பாரியில் பதிவுசெய்துவிட்டாலே ஏற்கனும் என சொல்லும் கூட்டத்தினர் இவற்றை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை..சரி இவர்கள் சொல்வதுபோல் அன்ஸாரி குலத்தில் நபிகளாருக்கு பாலூட்டிய உம்மு அப்துல் முத்தலிப் (சுவைபா) அவர்களுக்கும், உம்மு ஹராமுக்கும் எதுவும் உறவா என்று பார்த்தால் அவர்களின் உறவு பாட்டானார்களை கடந்து இணையும் உறவாகவே இருக்கிறது. இதைவைத்து உம்மு ஹராம் நபிகளாரின் மஹ்ரமற்ற உறவு என்று சொல்லவே முடியாது..

ஆக வம்சாவழியின் வாயிலாகவோ, பால்குடி உறவின் வழியாகவோ உம்மு ஹராம் அவர்கள் நபிகளாருக்கு எந்தவித மஹ்ரமான உறவும் இல்லை என்பது தெளிவாகிறது.


அந்நிய பெண்கள் விடயத்தில் திருக்குர்ஆனின் எச்சரிக்கை :-


(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 30)


இந்த இறைவசனத்தை ஏற்பவர்கள் கீழ்க்காணும் நபிமொழியையும் ஏற்றாக வேண்டும்.


ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : சஃத் பின் ஹிஷாம் நூல் : அஹ்மத் (24139)

குர்ஆனாகவே வாழ்ந்த நபிகளாரை அந்நிய பெண்ணின் வீட்டில் படுத்து உறங்கினார்கள், பேன் பார்க்க அனுமதித்தார்கள் என்று சொல்வது எத்தனை பெரிய அநீதம் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்

நபிகளாரின் எச்சரிக்கைகள் :-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அந்நியப்) பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் துôதரே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
                  நூல் : புகாரி (5232)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்காக எதையும் இணை வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி வாங்குங்கள் எனும் (60 : 12 ஆவது) இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
                  நூல் : புகாரி (7214)

கணவனாகவோ அல்லது திருமணம் முடிக்கத் தகாத உறவினராகவோ இருந்தாலே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணிடத்திலும் தங்குவது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
                  நூல் : முஸ்லிம் (4036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனென்றால் (தனித்திருக்கும் போது) ஷைத்தான் மூன்றாவது ஆளாக அவர்களுடன் உள்ளான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
                 நூல் : அஹ்மத் (109)


ஆக அந்நிய பெண்கள் விடயத்தில் கடுமையான எச்சரிக்கைகள் செய்து, அதன்படியே வாழ்ந்தும் காட்டிய அண்ணலாரை பற்றி வரும் இத்தகைய செய்திகள் தெளிவாக இட்டுக்கப்பட்ட செய்தியாகவே இருக்க முடியும், திருக்குர்ஆனுக்கும் நபிகளாரின் உபதேசங்களுக்கும், அவர்களின் இயல்பான நல்லொழுக்கங்களுல்கும் முரண்படும் இச்செய்தி உண்மையாக இருக்க முடியாது என்று கூறியே ஏற்க மறுக்கிறோம். நபிகளாரின் நல்லொழுக்கங்களை கற்றறிந்த எவரும் இதையே செய்வார்.

உம்மு ஹராம் அந்நியப் பெண் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், இந்த ஹதீஸை நியாயப் படுத்துவதற்காக, அவர்களை நபிகளாரின் பால்க்குடித் தாய் வம்சாவழி உறவு என பொய்யாக சித்தரிக்க முயல்வதை விட, நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ள, குர் ஆனுக்கு தெளிவாக முரண்படுகிற, இத்தகைய வழிகேடான செய்தியை ஏற்காமல் இருப்பதே சிறந்தது.

Comments

  1. நல்லதோர் ஆக்கம்

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் மிகவும் தேவையான ஆக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!